search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவன மோசடி வழக்கு"

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ 8 மணிநேரம் விசாரணை நடத்தியது. நாளையும் விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MamataDharna #CBI #KolkataCommissioner
    ஷில்லாங்:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
     
    போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கமிஷனருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

    மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவருடன் வக்கீல்கள் பலர் வந்திருந்தனர். 

    சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நீடித்தது.  பின்னர் இரவு 7.30 மணியளவில் கிளம்பிச் சென்றார். நாளையும் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடைபெறும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #MamataDharna #CBI #KolkataCommissioner
    மேற்கு வங்காள மண்ணை மம்தா களங்கப்படுத்தி விட்டார். சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை பாதுகாப்பவர்களை இந்த காவலாளி தப்ப விடமாட்டான் என்று பிரதமர் மோடி கூறினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் சூராபந்தரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள், அதே வன்முறை கலாசாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். அதனால் மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த மோசடியாளர்களை பாதுகாக்க ஒரு முதல்-மந்திரி தர்ணா போராட்டம் நடத்தியது, இதுவே முதல்முறை. ஆனால், இந்த காவலாளி (மோடி), சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையோ, அவர்களை பாதுகாப்பவர்களையோ தப்ப விடமாட்டான்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட காண்டாமிருக பொம்மை நினைவுப்பரிசுடன் பிரதமர் மோடி.

    சுராபந்தரில், கொல்கத்தா ஐகோர்ட்டின் சர்க்யூட் கிளையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘‘வடக்கு வங்காள மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. அவர்கள் வழக்கு தொடர இனிமேல் 600 கி.மீ. பயணம் செய்து கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டியது இல்லை. 100 கி.மீ.க்குள் இங்கு வந்து விடலாம்’’ என்று கூறினார்.

    சத்தீ‌ஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக பொய் சொல்லி, சத்தீ‌ஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளனர்.

    அப்படியானால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இல்லையா? இந்த விதிமுறைகளை ஏன் முன்பே சொல்லவில்லை? அடகுகடைக்காரர்களிடமும், உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது?

    சத்தீ‌ஷ்கார் மாநில அரசு, சி.பி.ஐ.க்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துள்ளது. தவறு செய்தவர்கள்தான் விசாரணையை கண்டு பயப்படுவார்கள். காரணமின்றி யாராவது விசாரணை நடத்துவார்களா?

    இந்திரா காந்தி குடும்பத்தில் பெரும்பாலானோர், ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். மெகா கலப்பட கூட்டணியிடம் மக்கள் உ‌ஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #CBIvsMamata #PMModi
    கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Mamata #MamatawelcomesSCorder
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த  நீதிபதிகள் ‘சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  

    அதேவேளையில், கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நிர்பந்தமான முறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அத்துமீறலாக நடந்துகொள்ள கூடாது. அவரை கைது செய்யவும் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் கடந்த மூன்று நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


    சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு ஆறாண்டுகளுக்கு முன்னர் இம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தபோது போடப்பட்ட வழக்காகும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சுதிப்தா சென்-னை கைது செய்து வழக்கு போட்டோம். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, பணம் கட்டி ஏமாந்த  முதலீட்டாளர்களுக்கு 300 கோடி ரூபாயை பெற்றுத் தந்திருக்கிறோம். இப்போது இவ்விவகாரத்தில் எங்களை குற்றவாளிகள்போல் சித்தரிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.

    நீதித்துறையின் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை கைது செய்வதற்காக இங்கு வந்தனர். ஆனால், அவரை கைது செய்ய கூடாது என்று சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ள இந்த உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி.

    இந்த நாட்டில் யாருமே உயர்வான எஜமானர்கள் இல்லை. ஜனநாயகம் மட்டுமே நம் நாட்டின் எஜமானர். நான் கொல்கத்தா கமிஷனருக்காக போராடவில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவருக்காகவும், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படவும், பாதுகாக்கப்படுவதற்காகவும் தான் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்விவகாரத்தில் இப்போது எங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mamata #MamatawelcomesSCorder #democracy #bigbossofIndia

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டம் 8-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Mamata #Mamatadharna
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
      
    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.

    மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அவருக்கு ஆதரவாக பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், முதல் மந்திரிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் மம்தாவின் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் மத்திய அரசை கண்டித்தும் மம்தாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகள் பேரணியில் ‘பேஸ்புக் லைவ்’ மூலம் தர்ணா போராட்டம் நடத்திவரும் இடத்தில் இருந்து மம்தா பானர்ஜி இன்று மாலை உரையாடினார்.

    மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு பணியாளர்களும் தற்போது இலக்காகி விட்டனர். மக்கள் பேசவே பயப்படுகின்றனர். மக்களின் ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது என தனது பேச்சினிடையே குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, எனது தர்ணா போராட்டம் வரும் 8-ம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தார். 

    அதன் பின்னர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகள் நடப்பதால் போராட்டம் கைவிடப்படும் என கருதப்படுகிறது. #Mamata #Mamatadharna 
    ×